விளையாட்டு:
ஆஸ்திரேலியாவை பழி தீர்த்தது இந்தியா: 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
இதன்மூலம், புணே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியிடம் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதற்கு பழி தீர்த்துக் கொண்டது இந்திய அணி.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தற்போது சமன் செய்துள்ளது இந்திய அணி.
இந்தியா:
ரயில் உணவகங்களில் மகளிருக்கு 33% உள்ஒதுக்கீடு
ரயில் நிலையங்களில் உணவகங்கள் நடத்துவதற்கு மகளிருக்கு 33 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் வாய்ப்பில் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும் என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஐஆர்சிடிசி உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறிய அளவிலான உணவகங்கள் சுமார் 8,000 இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று ஆயிரக்கணக்கான பெரிய உணவகங்களும் உள்ளன.
அங்கு தரமான உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒதுக்கீட்டு முறை மூலம் அந்த உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, சிறிய ரக உணவகங்களில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போர், சிறுபான்மையினர், ஓபிசி வகுப்பினர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோருக்கு மொத்தமாக 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ரிய உணவகங்களில் அந்த ஒதுக்கீட்டு விகிதம் 49.5 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் அந்த ஒதுக்கீட்டில் 33 சதவீதம் மகளிருக்கு வழங்கப்படும் என்று நிகழ் நிதியாண்டுக்கான (2016-17) ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்த அறிவிப்பு தற்போது அமல்படுத்தப்பட்டிருப்பதாக ஐஆர்சிடிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச பெண்கள் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஆளுநர்: உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சிகள் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான வாய்ப்புகளை அள்ளித் தந்துள்ளன. பெண்கள் தினத்தை ஒட்டி வழங்கப்படும் நாரி சக்தி போன்ற விருதுகள் இந்தியாவில் பெண்களை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியாக இருக்கின்றன.
பாலினங்களுக்கு இடையேயுள்ள பாகுபாட்டை நீக்கப் பாலமாகவும் சமமின்மை என்ற நிலை விலகவும் பெண்களுக்கு மதிப்பளிக்கவும் அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
தமிழகம்:
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் :
ரூ.295 கோடி வாராக் கடன் மறுசீரமைப்பில் பஞ்சாப் நேஷனல் வங்கி
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.295 கோடி மதிப்பிலான வாராக் கடன்கள் மறுசீரமைப்பில் தீவீரமாக ஈடுபட்டுள்ளது.
வாராக் கடனை வசூலிக்கும் வகையில் இந்த மாதத்தில் விற்பனை செய்வதற்காக ரூ.1,800 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷா அனந்தசுப்ரமணியன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வாராக் கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது ரூ.295 கோடி மதிப்பிலான நான்கு வாராக் கடன் சொத்துகளை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment