Monday 6 March 2017

6th MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

முர்ரேவுக்கு 45-ஆவது பட்டம்
துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 45-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.


துபையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை தோற்கடித்தார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரிடம் தோற்ற முர்ரே, வெர்டாஸ்கோவை வீழ்த்தி துபை ஓபனில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார். வெர்டாஸ்கோவுடன் இதுவரை 14 ஆட்டங்களில் மோதியுள்ள முர்ரே, இப்போது 13-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, "நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இங்கு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இறுதிச் சுற்றில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆரம்பத்தில் மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினாலும், இப்போது சிறப்பாக முடித்திருக்கிறேன்' என்றார்.
துபை ஓபனில் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள முர்ரே, அடுத்ததாக இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

உலகம் :

’பல ஏவுகணைகளை கடலில் செலுத்தி வட கொரியா சோதனை'
தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகள் பலவற்றை கடலுக்குள் செலுத்தி வட கொரியா சோதனை மேற்கொண்டது என்று தென் கொரிய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்தது.
தென் கொரிய முப்படைகளின் தலைவரான தளபதி லீ சூன்-ஜின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வட கொரியாவின் வடக்கு பியோங்கன் மாகாணத்தில் உள்ள டோங்சாங்ரி பகுதியிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இவை தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளாகும். அந்த ஏவுகணைகள் சுமார் ஆயிரம் கி.மீ. தூரம் பறந்து சென்று கிழக்கு கடலுக்குள் பாய்ந்தன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றோ, எத்தனை ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்றோ அதில் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்க ராணுவமும் தென் கொரிய ராணுவமும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வரும் போர்ப் பயிற்சி நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், வட கொரியாவின் ஏவுகணை சோதனை நடைபெற்றிருக்கிறது.
பேஸ்புக் மெசேஞ்சரில் வருது 'டிஸ்லைக்' பட்டன்!
சீன பாதுகாப்புத் துறை பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.10.18 லட்சம் கோடி
சீனாவின் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 1.04 லட்சம் கோடி யுவான் (சுமார் ரூ. 10.18 லட்சம் கோடி) என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்தது.
அந்தச் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2017-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 1.04 லட்சம் யுவானாக (சுமார் ரூ. 10.18 லட்சம் கோடி) இருக்கும். கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட இது 7.6 சதவீதம் அதிகாகும்.
சீனாவின் பாதுகாப்புத் துறை பட்ஜெட் ஒதுக்கீடு 1 லட்சம் கோடி யுவானைத் தொடுவது இதுவே முதல் முறை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.3 சதவீதமாகும். நேட்டோ நாடுகளின் சராசரி ஒதுக்கீடு 2 சதவீதமாகும். அமெரிக்க ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 10% அதிகரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், சீனாவின் ஒதுக்கீட்டை அதிகம் என்று கூற முடியாது என்று ஜின்ஹுவா தெரிவித்தது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஒதுக்கீட்டை விட இது 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

ரூ. 4,500 கோடி செலவில் 50 விமான நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுபாதைகளை புதுப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பயன்பாட்டில் இல்லாத சுமார் 50 விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைப் புதுப்பிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2017-18-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, விமான நிலையங்களைப் புதுப்பிக்க ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அட்டாரி: நாட்டின் மிகப்பெரிய மூவர்ணக்கொடி ஏற்றிவைப்பு
பஞ்சாப் மாநிலம், அட்டாரி அருகே உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக் கொடி, மிக உயரமான கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட அந்தத் தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தார். அப்போது, தனது கனவுத் திட்டம் தற்போது நனவாகியிருப்பதாக அவர் கூறினார்.
110 மீட்டர் (360 அடி) உயரமுள்ள கம்பத்தில், இந்தக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 91.44 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடியே, மிக உயரமான கம்பத்தில் பறக்கும் கொடியாகக் கருதப்பட்டது.
மக்களவை முன்னாள் தலைவர் ரபி ராய் மறைவு
மக்களவையின் முன்னாள் தலைவரும், பிரபல சோஷலிஸ தலைவருமான ரபி ராய் (90) திங்கள்கிழமை காலமானார்.
ஒடிஸா மாநிலம், குர்தா மாவட்டத்திலுள்ள பன்ராகர் கிராமத்தில் 1926-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ரபி ராய் பிறந்தார். இவர் 1979-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1980-ஆம் ஆண்டு ஜனவரி வரை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1989-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை மக்களவையின் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து கட்டாக் நகரிலுள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை அவர் காலமானார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவருடைய உடல் புவனேசுவரத்திலுள்ள லோஹியா பவனத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரபி ராயின் மறைவுக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகம்:

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்
தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரை நடைபெற்றது.
இதன் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார். புதிய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  ஆனாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிரு நாளில் வெளியாகும்.

வர்த்தகம் :

சாம்சங் நிறுவனத்தின் 2 புதிய செல்லிடப்பேசிகள் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ வரிசையில் மேலும் இரண்டு புதிய மாடல்களில் செல்லிடப்பேசிகளை திங்கள்கிழமை மும்பையில் அறிமுகம் செய்தது.
புதிய மாடல்களை அறிமுகம் செய்து சாம்சங் இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் அசீம் வார்ஸி தெரிவித்ததாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டில் கேலக்ஸி ஏ வரிசை உயர் மதிப்பு பிரிவில் அதிகபட்ச தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதே எங்களின் இலக்கு. அதன் ஒரு பகுதியாக, தற்போது கேலக்ஸி ஏ 7 மற்றும் கேலக்ஸி ஏ 5 மாடல்களில் செல்லிடப்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கேலக்ஸி ஏ 7 மாடல் செல்லிடப்பேசி 5.7 அங்கு திரை, 3,600எம்ஏஎச் திறனுடயை பேட்டரியை உள்ளடக்கியது. இதன் விலை ரூ.33,490. கேலக்ஸி ஏ 5 மாடல் செல்லிடப்பேசி 5.2 அங்குல திரை, 3,000எம்ஏஎச் திறனுடைய பேட்டரியை கொண்டது. இதன் விலை ரூ.28,990.
கடந்த 2015-இல் 41 சதவீதமாக இருந்த சாம்சங்கின் சந்தை பங்களிப்பு 2016-இல் 46.3 சதவீதமாக உயர்ந்தது என்றார் அவர்.

No comments:

Post a Comment