Sunday 5 March 2017

4th & 5th MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

மெக்ஸிகோ ஓபன்: சாம் கியூரி சாம்பியன்
மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் சாம் கியூரி சாம்பியன் பட்டம் வென்றார்.


மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் சாம் கியூரி 6-3, 7-6 (3) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலைத் தோற்கடித்தார்.
சர்வதேச தரவரிசையில் 40-ஆவது இடத்தில் இருக்கும் சாம் கியூரி நடாலுக்கு எதிராக 19 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். இதுவரை நடாலுடன் 5 முறை மோதியுள்ள கியூரி, முதல்முறையாக அவரை வீழ்த்தியுள்ளார்.
மெக்ஸிகோ ஓபனில் 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், முதல்முறையாக இங்கு தோற்றுள்ளார். முன்னதாக 14 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றிருந்தார்.
சாம் கியூரிக்கு இது 9-ஆவது ஏடிபி பட்டமாகும். இந்தப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், நிக் கிர்ஜியோஸ், நடால் ஆகியோரை வீழ்த்தியிருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சாம் கியூரி.

உலகம் :

பிரீமியம் ஹெச்1பி விசாவுக்கு ஆறு மாத தடை விதித்தது அமெரிக்கா!
அமெரிக்காவுக்கு பணி  நிமித்தம் செல்வோருக்கு வழங்கப்படும் பிரீமியம் ஹெச்1பி விசாவை வழங்கும்  நடைமுறைக்கு ஆறு மாதங்களுக்கு தற்காலிக தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பணி அல்லது கல்வி பயில செல்வோர் சாதாரணமாக ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, முடிவு எடுக்கப்பட சாதாரணமாக 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும். ஆனால் பிரீமிய நடைமுறையில் 1,225 டாலர் கூடுதலாக செலுத்தும் பட்சத்தில் 15 நாட்களில் விண்ணப்பத்துக்கு பதில் கிடைத்துவிடும்.
ஆனால் தற்போது அமெரிக்காவின் இந்த தடை உத்தரவு வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிக அளவு நிறுவனங்கள் சேருவதைத் தவிர்ப்பதற்காக, பிரீமியம் ஹெச்1பி விசா நடைமுறையை அமெரிக்கா கையாளுகிறது. ஆனால் அதிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால்தான் அமெரிக்கா இந்தமுடிவை எடுத்துள்ளது. 
இத்துடன் 2018-ம் நிதி ஆண்டுக்கான ஹெச்1பி விசாக்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருது வருது பேஸ்புக் டி.வி !
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் தொலைக்காட்சிகளில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்னும் இதழில் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் முதலில் 'பேஸ்புக் லைவ்' என்னும் பெயரில் பயனாளர்கள் தங்களது வீ டியோக்களை நேரலை ஒளிபரப்பு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. அதற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது தொலைக்காட்சிகளில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தியா:

வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில் கட்டணம்: பாரத ஸ்டேட் வங்கி
வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில், அவரிடம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் பாரத ஸ்டேட் வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரத ஸ்டேட் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன், கடந்த 2012-ஆம் ஆண்டு குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாத கணக்குகள் மீது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில் அவரிடம் கட்டணம் வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது.
இதையடுத்து, வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் மீண்டும் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவு செய்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: லாகூரில் இந்தியா-பாக். பேச்சுவார்த்தை
சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பாக, லாகூரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே, வரும் 20, 21-ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டு அரசுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுக்கொரு முறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்படி, லாகூரில், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வருடாந்திர பேச்சு வார்த்தைக் கூட்டத்தில், இந்தியத் தரப்பில் இருந்து சிந்து நதி நீர் ஆணையரும், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். இதற்கு முன்பு, இந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டம், கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
மதிய உணவு திட்டத்தில் பயன்பெற மாணவர்களுக்கு "ஆதார்' கட்டாயம்: மத்திய அரசு
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களும், சமையலர்களும் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
பள்ளிக் கல்வி தொடர்புடைய மானியத் திட்டங்களில் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், மேற்கண்ட நடவடிக்கையை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இதன் மூலம், மதிய உணவுத் திட்டத்தை இன்னும் சிறப்பாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்த முடியும்.
அரசின் சேவைகள், சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்குவதில் ஆதாரை இணைப்பதன் மூலம் பயனாளிகள் நேரடியாக பலன்களை பெற முடிகிறது.
மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்கள் மட்டுமன்றி சமையலர்களும் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிவிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படவுள்ளது. இதுவரை ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்காக ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி

அனைவராலும் பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் 2017 2018-ஆம் ஆண்டிற்கான 2510 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமான www.externalbsnlexam.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Telecom Officer (JTO)
மொத்த காலியிடங்கள்: 2,510. இதில் தமிழகத்திற்கு 103 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.
பணியிடம்: இந்தியா முழுவதும்
தகுதி: பொறியியல் துறையில் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், வானொலி, கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மற்றும் 2017 கேட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 06.04.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தேர்வு செய்யப்படும் முறை: 2017 கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.300.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/documents/GATE_JTODR_Notification.pdf என்ற (PDF) லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளன
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.
இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வர்த்தகம் :

மத்திய, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களுக்கு கவுன்சில் ஒப்புதல்
மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்பு (ஐஜிஎஸ்டி) சட்டம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 11-ஆவது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் முன்பு நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தின் துணைச் சட்டங்களான மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றின் வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டக்கூடிய சிறிய ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட், தாபாக்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி (மத்திய, மாநில அரசுகள் தலா 2.5 சதவீத வரி விதிப்பு) விதிப்பதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி பேசியபோது இந்தத் தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தில்லியில் கடந்த முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கான இழப்பீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதையடுத்து சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி சட்டங்களுக்கு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 12-ஆவது கூட்டம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மாநில ஜிஎஸ்டி சட்டம், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

Click here to download 4th & 5th March Review in Tamil

No comments:

Post a Comment