உலகம்:
நீர்மூழ்கி அணுஆயுத ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய அணுஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை, பாகிஸ்தான் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்தியப் பெருங்கடலில் இந்த சோதனை நடைபெற்றுள்ள போதிலும், எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"பாபர்-3' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் ஏவுகணையாகும். அணு வெடிபொருளை சுமந்து சென்று, சுமார் 450 கிமீ பாய்ந்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, திங்கள்கிழமையன்று பரிசோதிக்கப்பட்டது.
அதன்படி, கடலுக்கடியில் இருந்து செலுத்தப்பட்ட பாபர்-3 ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த வெற்றி, நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
'உதய்' திட்டத்தில் இணைந்தது தமிழகம்: ரூ.11 ஆயிரம் கோடிக்குப் பலன்-மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல்
'உதய்' திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த பலன்கள் கிடைக்கும் என்று மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மாநில மின் பகிர்மான நிறுவனங்கள் லாபத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்தும் நோக்குடன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய "உதய்' திட்டத்தை மத்திய அரசு 2015, நவம்பர் 20-இல் அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தில் தமிழகம் சேர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தில்லியில் மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது.
மத்திய மின் துறை அமைச்சக இணைச் செயலர்கள் ஏ.கே.வர்மா, ஜோதி அரோரா ஆகியோர் தமிழக கூடுதல் தலைமைச் செயலரும் எரிசக்தித் துறை செயலருமான (கூடுதல் பொறுப்பு) ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழக (டான்ஜெட்கோ) தலைவர் சாய் குமார் ஆகியோர் இதற்கான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.
குஜராத்தில் இந்தியாவின் முதல் சர்வதேச பங்குச் சந்தை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
குஜராத் மாநிலம், காந்திநகரில் நாட்டின் முதலாவது சர்வதேச பங்குச் சந்தையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
காந்திநகரின் கிஃப்ட் சிட்டி (குஜராத் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி) பகுதியில் "இந்தியா-ஐஎன்எக்ஸ்' என்ற பெயரில் சர்வதேச பங்குச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய நிதித் துறையில் இது மிகவும் முக்கியமான சம்பவமாகும். கிஃப்ட் சிட்டி தொடர்பான எனது திட்டம் மிகவும் பெரியது. இன்றிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில், உலகில் இருக்கும் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் இதுவும் ஒன்றாக, பண்டங்கள், செலாவணிகள், பங்குகள், வட்டி விகித பங்குகள் அல்லது பிற நிதிசார்ந்த சாதனங்களின் விலையை தீர்மானிக்கக்கூடிய சந்தையாக இருப்பதை நான் காண்பேன்.
தரமான சேவை வழங்குவதிலும், விரைந்து பரிவர்த்தனை செய்வதிலும் இந்த பங்குச் சந்தை புதிய அத்தியாயம் படைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். கிஃப்ட் சிட்டியிலுள்ள சர்வதேச நிதி சேவைகள் மையத்தின் (ஐஎப்எஸ்சி) ஒரு பகுதிதான் இந்த பங்குச் சந்தை.
விளையாட்டு :
இரட்டையர் பிரிவு: ரோஹன்-ஜீவன் ஜோடி சாம்பியன்
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சகநாட்டவர்களான பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடியைத் தோற்கடித்தது.
இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா வென்ற 15-ஆவது சாம்பியன் பட்டம் இது. அதேநேரத்தில் அவர் சென்னை ஓபனில் முதல்முறையாக வாகை சூடியுள்ளார். அதேபோல், தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் வென்ற முதல் ஏடிபி பட்டம் இது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபனில் சோம்தேவுடன் இணைந்து அரையிறுதி வரை முன்னேறியிருந்ததே ஜீவனின் அதிகபட்ச வெற்றியாக இருந்தது.
2011-க்குப் பிறகு சென்னை ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் ரோஹன்-ஜீவன் ஜோடி பெற்றுள்ளது.
சென்னை ஓபன்: பெளதிஸ்டா சாம்பியன்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் சென்னை ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் பெளதிஸ்டா. ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற 5-ஆவது ஏடிபி பட்டம் இது.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த பெளதிஸ்டா, தனது இறுதிச் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவை தோற்கடித்தார். சென்னை ஓபனில் முதல்முறையாக பங்கேற்றவரான மெத்வதேவ், தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக ஏடிபி போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடிய மகிழ்ச்சியோடு விடை பெற்றார்.
ஐசிசி தரவரிசையில் "டாப்-5': கோலியுடன் இணைந்தார் வில்லியம்சன்
ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்ததுள்ளார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.
இதன்மூலம் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 ஆகிய மூன்று விதமான போட்டிகளின் தரவரிசையிலும் ஒரே சமயத்தில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் 2-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வில்லியம்சன். முதல் வீரர் விராட் கோலி ஆவார்.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை நியூஸிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்தத் தொடரில் வில்லியம்சன் முறையே 73, 12, 60 என மொத்தம் 145 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்தைப் பிடித்தார். வில்லியம்சன், டெஸ்ட் தரவரிசையில் 4-ஆவது இடத்திலும், ஒரு நாள் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்திலும் உள்ளார். கோலி, டி20 தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையில் 2-ஆவது இடத்திலும் உள்ளார்.
சர்வதேச செஸ்: பிரக்னானந்தா 3-ஆவது இடம்
இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளி மாணவர் ஆர். பிரக்னானந்தா 3-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற 92-ஆவது ஹேஸ்டிங்ஸ் செஸ் போட்டியில், வேலம்மாள் பள்ளியில் 6-ஆம் வகுப்பும் படிக்கும் ஆர்.பிரக்னானந்தா பங்கேற்றார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், போட்டியில் 3-ஆவது இடம் பெற்றார். அவருக்கு பரிசும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
வர்த்தகம் :
ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான டெபாசிட் விவரங்களை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு வருமான வரித்துறை உத்தரவு
ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரை யிலான காலத்தில் செய்யப்பட்ட அனைத்து விதமான டெபாசிட் விவ ரங்களையும் வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும் என வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு முன் நடந்த பரிவர்த்தனை களை ஆராய வருமான வரித்துறை முடிவெடுத்திருக்கிறது.
மேலும், பான் எண் இல்லாத வங்கி கணக்கு மற்றும் படிவம் 60 (பான் எண் இல்லாதவர்) கொடுத்து வங்கி கணக்கு தொடங்கியவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருக் கிறது.
புதிய அறிவிப்பின்படி, வங்கி கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான டெபாசிட் விவரங்களைத் தெரிவிக்கவேண்டும். இதுவரை பான் எண்ணைச் சமர்ப்பிக்காதவர் களின் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். தவிர வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அவர்கள் பான் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை குறிப்பிட்டிருக்கிறது.
No comments:
Post a Comment