உலகம்:
ஐ.நா.வுக்கான தூதராக இந்திய - அமெரிக்கர் நிக்கி ஹேலி நியமனம்: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஐ.நா.வுக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் பதவிக்கு, தெற்கு கரோலிணா மாகாண ஆளுநரான நிக்கி ஹேலியை (45) நியமிக்கவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதலைப் பெறுவதற்கான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சர்வதேச விவகாரங்களில் அனுபவம் இல்லாத நிக்கி ஹேலியால், ஐ.நா. தூதர் பொறுப்பை எவ்வாறு சமாளிக்க முடியும்? என்று சில ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
எனினும், நியமனத்துக்கு முந்தைய நேர்காணலின்போது, ரஷியா, இஸ்ரேல் குறித்த ஐ.நா.வின் நிலைப்பாடு போன்ற சிக்கல் நிறைந்த விவகாரங்களில்கூட நிக்கி ஹேலி சிறப்பாக பதிலளித்ததாக பெரும்பாலான எம்.பி.க்கள் அவருக்கு புகழாரம் சூட்டினர்.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக 14 முக்கிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின.
அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை ஷேக் முகமது பின் சையது தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் நலன் குறித்தும் பாதுகாப்பு நிலவரம், ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது என பல முக்கிய விஷயங்களை இந்தச் சந்திப்பின்போது மோடியும், முகமது பின் சையதும் விவாதித்தனர்.
இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ராணுவத் தளவாட உற்பத்தியில் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் பரஸ்பர நல்லுறவு. வர்த்தக மேம்பாடு ஆகியவை அவற்றில் முக்கியமான ஒப்பந்தங்களாகும்.
மேலும், பயங்கரவாத ஒழிப்பு, ஒருங்கிணைந்த பொருளாதார நடவடிக்கைகள், கடல்வழி போக்குவரத்தில் இணைந்து செயல்படுதல், சாலைப் போக்குவரத்துத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஆள்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை அளித்தல் உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தங்களும் இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகின.
இந்தியா:
தமிழகம், புதுச்சேரி அதிகாரிகள் 10 பேருக்கு தேசிய விருதுகள்
கடந்த ஆண்டு தேர்தல் பணிகளில் சிறப்பாகப் பரிணமித்த மாநிலங்கள் பிரிவில் தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் பணியாற்றி வரும் 10 அதிகாரிகளுக்கு தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
சிறப்பாகத் தேர்தல் பணியாற்றிய மாநிலங்கள் வரிசையில், தேர்தல் மேலாண்மையில் முதன்மையாக விளங்கிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வாக்காளர் கல்வி, வாக்காளர்கள் பங்களிப்பில் சிறந்து விளங்கிய புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி வி.கந்தவேலு;
சிறந்த தேர்தல் நடைமுறைகள் பிரிவின்கீழ் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி கே.வீரராகவா (வாக்காளர் கல்வி, தேர்தல் பங்களிப்பு); திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி கே.எஸ்.பழனிசாமி (சிறந்த வாக்காளர் பதிவு மேலாண்மை); காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.கவாஸ், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சரவணன் (சிறந்த பாதுகாப்பு மேலாண்மை);
வருமான வரித்துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், கூடுதல் இயக்குநர் ராய் ரோஸ் (தேர்தல் செலவின கண்காணிப்பு); புதுச்சேரியில் உள்ள தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் கோபி சுவாமிநாதன் (தகவல் தொழில்நுட்ப முயற்சி);
தேசிய ஊடக விருது பிரிவின்கீழ், வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக செய்திகளை வழங்கியதற்காக தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் "தந்தி டிவி'க்குரிய விருது அதன் மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது.
36 பேருக்கு ஜீவன் ரக்சா பதக்கங்கள் அறிவிப்பு
வீரதீர செயல்களில் ஈடுபட்டு மனித உயிர்களை காப்பாற்றுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஜீவன் ரக்சா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்காக மொத்தம் 36 பேருக்கு ஜீவன் ரக்சா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பதக்கங்கள் வழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வோத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், உத்தம் ஜீவக் ரக்சா பதக்கம், ஜீவன் ரக்சா பதக்கம் என மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தலா 5 பேர் இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மிசோரம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 4 பேரும், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து தலா இரண்டு பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பங்கஜ் குமார் பாண்டேவுக்கு ஜீவன் ரக்சா பதக்கம் வழங்கப்படுகிறது.
யேசுதாஸ், விராட் கோலி, சரத்பவார், முரளி மனோகர் ஜோஷிக்கு பத்ம விருதுகள்
பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாடகர் கே.ஜே. யேசுதாஸ், அரசியல் கட்சித் தலைவர்கள் சரத் பவார், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் சிறந்த குடிமக்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பத்ம விருதுகள் பெரும் 20 பேர் கொண்ட பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதன்படி, பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பாராலிம்பிக் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கௌடா, ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷ், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷேகர் நாயக் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வரிசையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மறைந்த முஃப்தி முகம்மது சயீத், முன்னாள் சபாநாயாகர் பி.ஏ. சங்மா, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த சுந்தர் லால் படவ் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.
திரையிசைப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், இசைக் கலைஞர் விஷ்வா மோகன் பட், பாடகர் அனுராதா பட்வால் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுகளை பெறுகிறார்கள்.
எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன், இசைக் கலைஞர் இம்ராத் கான் ஆகியோர் வெளிநாடு வாழ் இந்தியர்களாவர். இவர்களுக்கும், சமூக சேவைக்காக நேபாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலாவுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம்:
குடியரசு தினம்: முதல் முறையாக தமிழக முதல்வர் கொடியேற்ற உள்ளார்
குடியரசு தினத்தின்போது, ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவ், அந்த மாநிலத்தில் கொடியேற்றவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு சார்பில் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு மேடைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அழைப்பிதழை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சில அருகே குடியரசு நாள் அணி வகுப்பு நடைபெறவுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு :
தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன் (21), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் 1.89 மீ தாண்டி தங்கம் வென்றார்.
தங்கவேல்-சரோஜா தம்பதியின் மகன் மாரியப்பன், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தினால் வலது கால் பாதத்தை முழுமையாக இழந்து மாற்றுத் திறனாளியானார். தற்போது, சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் இளங்கலை நிர்வாகவியல் (பி.பி.ஏ) இறுதியாண்டு பயின்று வருகிறார். மாரியப்பனின் பாராலிம்பிக் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.2 கோடி ஊக்கத்தொகை வழங்கியது.
சையது மோடி பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சிந்து
சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் சிந்து 21-9, 21-11 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான அனுரா பிரபுதேசாயை தோற்கடித்தார். சிந்து தனது 2-ஆவது சுற்றில் மற்றொரு இந்தியரான லலிதா தாஹியாவை எதிர்கொள்கிறார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் சிந்து 21-9, 21-11 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான அனுரா பிரபுதேசாயை தோற்கடித்தார். சிந்து தனது 2-ஆவது சுற்றில் மற்றொரு இந்தியரான லலிதா தாஹியாவை எதிர்கொள்கிறார்.
வர்த்தகம் :
விப்ரோ துணைத் தலைவர் குரியன் ஜனவரி 31-ல் ஓய்வு
நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் துணைத் தலைவர் டி.கே.குரியன் இம்மாதம் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நிர்ணயம் செய்த காலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஓய்வு பெறுகிறார். புதிய தலைமைச் செயலாளர் மற்றும் செயல் இயக்குநராக அபித்அலி இஸட் நீமுச்வாலா நியமனம் செய்யப்பட்டபோது குரியன் துணைத் தலைவராக கடந்த வருடம் பதவி உயர்த்தப்பட்டார்.
இவர்கள் இருவரும் கடந்த 12 மாதங்களாக இணைந்து செயல்பட்டனர். புதிய பிரிவு களை உருவாக்கி நிறுவனத்தை பலப்படுத்தினார்கள். விப்ரோ நிறுவனத்தை விரிவுப்படுத்தி யதில் குரியனின் பங்கு மிக முக்கியமானது என விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி தெரிவித்தார்.
கடந்த 2000-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தில் குரியன் இணைந்தார். விப்ரோ நிறுவனத் தின் பல முக்கியமான பணிகளை கவனித்துவந்தார்.
No comments:
Post a Comment