Sunday 26 February 2017

24th - 26th FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

வர்த்தகம் :

இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை: ஆய்வில் தகவல்
இந்தியாவின் மிகப் பெரிய பணக் கார நகரம் மும்பை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் கிட்டத்தட்ட 46,000 மில்லியனர்களும் 28 பில்லியனர்களும் வசிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.




இந்தியாவின் பணக்கார நகரங்கள் பற்றி நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு வெளிவந்துள்ளது. இந்த ஆய்வின்படி பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடத் தில் உள்ள மும்பையின் மொத்த சொத்து மதிப்பு 28,000 கோடி டாலர் (ரூ.54.64 லட்சம் கோடி) என தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் புதுடெல்லியும் மூன்றாவது இடத்தில் பெங்களூரும் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள புதுடெல்லியில் மொத்தம் 23,000 மில்லியனர்களும் 18 பில்லியனர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லியின் மொத்த சொத்து மதிப்பு 45,000 கோடி டாலர் (ரூ.29.9 லட்சம் கோடி) எனவும் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூருவின் மொத்த சொத்து மதிப்பு 32,000 கோடி டாலர்(ரூ.21.32 லட்சம் கோடி) எனவும் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் 7,700 மில்லியனர் களும் 8 பில்லியனர்களும் வசிப்பதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஹைதரா பாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களும் இடம்பெற் றுள்ளன. ஹைதராபாத்தில் 9,000 மில்லியனர்கள் மற்றும் 6 பில்லியனர்கள் வசிப்பதாகவும் இந்நகத்தின் மொத்த சொத்து மதிப்பு 31,000 கோடி டாலர் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் :

இனி பேஸ்புக் லைவ் வீடியோவில் கூட வருது விளம்பர இடைவேளை!
இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றும் லைவ் வீடியோவில் கூட 20 நொடி விளம்பர இடைவேளை வரும் என்று பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'ரிகோட்' என்ற இதழில் வியாழன் அன்று  வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படும் விளம்பரங்கள் போன்று இனி பேஸ்புக் லைவ் விடியோக்களின் நடுவிலும் விளம்பரங்கள் காட்டப்படும். இந்த சேவையானது முதலில் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடையே பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்த விளம்பரங்களின் மூலம்   கிடைக்கும் வருவாயானது பயனாளர் மற்றும் பேஸ்புக் நிர்வாகத்திற்கு இடையே முறையே 55:45 என்ற சதவீதத்தில் பிரித்துக் கொள்ளப்படும்.
ஈரான் கடற்படை போர்ப் பயிற்சி: அமெரிக்கா கவலை
ஈரான் எல்லையையொட்டிய கடற் பகுதியில் அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள் போர்ப் பயிற்சியைத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹபீபுல்லா சய்யாரியை மேற்கோள் காட்டி அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சி இந்தச் செய்தியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
ஹோர்முஸ் ஜலசந்தியையொட்டிய இந்திய பெருங்கடல், ஓமான் கடல் அடங்கிய 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பில் போர்ப் பயிற்சி நடைபெறுகிறது என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
இந்தப் போர்ப் பயிற்சியில் ஈரான் புரட்சி பாதுகாப்புப் படைப் பிரிவு கலந்து கொள்ளவில்லை. அந்தப் படைப் பிரிவினர் அவ்வப்போது அமெரிக்க வணிக கப்பல்களுக்குத் தொல்லை கொடுத்து வருவதாக அமெரிக்க அரசு புகார் கூறி வருகிறது.

இந்தியா:

உ.பி.யில் இன்று 5-ஆவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 5-ஆவது கட்டமாக 51 தொகுதிகளுக்கு இன்று திங்கள்கிழமை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதையொட்டி பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பு சென்றனர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே 4 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இந்நிலையில், பல்ராம்பூர், கோண்டா, ஃபைசாபாத், அம்பேத்கர் நகர், பாஸ்டி, அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு இன்று திங்கள்கிழமை 5-ஆவது கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
5-ஆவது கட்டத் தேர்தலில் 608 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அமேதியில் அதிகபட்சமாக 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கபில்வஸ்து, இடாவா ஆகிய தொகுதிகளில் குறைந்தபட்ச எண்ணிக்கையாக தலா 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப்புடன் இந்திய தூதர் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னாவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவருடனான இந்தியத் தூதரின் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்காவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அனைத்து நாட்டுத் தூதர்களையும் சனிக்கிழமை நேரில் அழைத்துப் பேசினார். மேலும், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

தமிழகம்:

TNPL நிறுவனத்தில் பணி
அனைவராலும் TNPL என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager
சம்பளம்: மாதம் ரூ.23,400 - 29,300
பணி: Shift Engineer
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 24,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
குடியரசுத் தலைவர் மார்ச் 2-இல் சென்னை வருகை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மார்ச் 2-ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். சென்னை தாம்பரத்தில் பயிற்சி முடித்த இந்திய விமானப்படை வீரர்களின் நிகழ்வில் மார்ச் 3-ஆம் தேதி பங்கேற்ற பிறகு அவர் தில்லி திரும்புகிறார்.
கொச்சி பயணம்: தமிழகம் வருவதற்கு முன்பாக தில்லியில் இருந்து மார்ச் 2-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கேரள மாநிலம் கொச்சிக்கு செல்கிறார். இதையொட்டி, கொச்சி கடற்படை தளத்துக்கு தனி விமானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு வரும் குடியரசுத் தலைவருக்கு முப்படை வீரர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்துவர்.
இதையடுத்து, கொச்சி லீ மெரீடியன் ஹோட்டலில் நடைபெறும் கே.எஸ்.ராஜாமணி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

விளையாட்டு :

சர்வதேச குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் முகமது
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முகமது ஹுஸாமுதீன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் முகமது ஹுஸாமுதீன், பல்கேரிய வீரர் ஸ்டீஃபன் இவானோவை தோற்கடித்தார். முகமது ஹுஸாமுதீன் தனது இறுதிச் சுற்றில் உக்ரைனின் மைகோலா பட்சென்கோவை சந்திக்கிறார்.
உலக மகளிர் செஸ்: ஹரிகாவுக்கு வெண்கலம்
உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலம் வென்றார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் டைபிரேக்கர் முறையில் சீனாவின் டேன் ஜாங்கியிடம் தோல்வியடைந்தார் ஹரிகா.
இதனால் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த ஹரிகா, வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார். டைபிரேக்கர் சுற்றில் ஹரிகா தனக்கு கிடைத்த ஏராளமான வாய்ப்புகளை கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது. டேன் ஜாங்கி தனது இறுதிச் சுற்றில் உக்ரைனின் அன்னா முஜிசுக்கை சந்திக்கிறார்.

No comments:

Post a Comment