Friday 10 February 2017

11TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஓலா சிஎப்ஓ ராஜினாமா
ஓலா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி(சிஎப்ஓ) ராஜிவ் பன்சால் மற்றும் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ரகுவேஷ் சரப் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.


நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் ஓலா மணியின் தலைவர் பல்லவ் சிங், தற்காலிக தலைமை நிதி அதிகாரியாக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகுவேஷ் சரப்புக்கு மாற்றாக தலைமை மார்கெட்டிங் அதிகாரி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.
இது குறித்து ஓலா நிறுவனத் துக்கு அனுப்பப்பட்ட கேள்வி களுக்கு பதில் கிடைக்கவில்லை. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த ராஜிவ் பன்சால் ஒருவருடத்துக்கு முன்பு ஓலாவில் இணைந்தார். அவர் வெளியேறிய தற்காக இன்போசிஸ் நிறுவனம் வழங்கிய நிதி சமீபத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது குறித்து இன்போசிஸ் நிறுவனர்கள் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஓலா நிறுவனத்துக்கு தேவையான நிதியை திரட்ட முடியாத தால் பன்சால் ராஜினாமா செய் திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை10 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அமெரிக்கா திட்டம்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட முன்வடிவை இரண்டு அமெரிக்க செனடர் உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்வடிவு அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற நினைக்கும் இந்தியர்கள் மற்றும் குடியேற்ற உரிமை (கிரீன் கார்டு) பெற விரும்புவோருக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனத் தெரிகிறது.
அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற நோக்கில் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் டாம் காட்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் டேவிட் பெர்டியூ ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர். அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது குறையும். அத்துடன் வேலை திறன் இல்லாதவர்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்ற நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு அளிக்கப் படுகிறது. அதேபோல 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் அளிக்கப்படு கிறது. புதிய பரிந்துரை அமலுக்கு வந்தால் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறையும்.
சிறப்பு பிரிவை விற்கிறது டாடா ஸ்டீல் இங்கிலாந்து
டாடா ஸ்டீல் இங்கிலாந்து நிறுவனம் அங்கு இருக்கும் சிறப்பு ஸ்டீல் பிரிவை விற்க முடிவு செய்திருக்கிறது. இங்கிலாந்து முன்னணி நிறுவனமான லிபர்டி ஹவுஸ் குழுமத்திடம் 840 கோடி ரூபாய்க்கு விற்க டாடா ஸ்டீல் இங்கிலாந்து முடிவு செய்திருக்கிறது.
விமானம், ஆட்டோமொபைல், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான ஸ்டீலை இந்த பிரிவு உற்பத்தி செய்து வருகிறது. இந்த பிரிவில் பணிபுரிந்த 1,700 பணியாளர்கள் லிபர்டி குழுமத்துக்கு மாறுவார்கள்.
இந்தியா:
சீன -இந்திய ஆராய்ச்சித் திட்ட தலைவராக சென்னை ஐஐடி பேராசிரியர் தேர்வு
2017 -19 -ஆம் ஆண்டுக்கான சீன -இந்திய ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக, சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் கரக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 28.12 லட்சம் மதிப்பிலான இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய -சீன கல்வி நிறுவனம், உலக அளவில் 8 நபர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்துள்ளது.
இதன் மூலம் ரூ.3.34 லட்சம் ரொக்கப் பரிசை ஜோ தாமஸ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி, ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்வதே இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
உலக அளவில் நடத்தப்பட்ட தேர்வில் 8 ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக சென்னை ஐஐடி சமூக அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் கள ஆய்விலும், நியூயார்க்கில் சிறிது காலம் தங்கியிருந்தும் இவர் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கம்
அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கே.ஏ.செங்கோட்டையன் அப்பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் அதிமுகவினர் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் சென்ற மதுசூதனன் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

விளையாட்டு :

டி காக், ஆம்லா சதம்; தென் ஆப்பிரிக்கா 384 ரன்கள் குவிப்பு
இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய டி காக்-ஆம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.3 ஓவர்களில் 187 ரன்கள் குவித்தது. டி காக் 87 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த டூபிளெஸ்ஸிஸ் 41, கேப்டன் டிவில்லியர்ஸ் 14, டுமினி 10 ரன்களில் வெளியேற, ஆம்லா 134 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்வரிசையில் பெஹார்டியன் 20 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து வெளியேற, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 350 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 24-ஆவது முறையாகும். இதன்மூலம் அதிக முறை 350 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

வர்த்தகம் :

எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமனம்
மத்திய அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தின் தில்லி அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றி வரும் ஹேமந்த் பார்கவா அந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அப்பதவியில், வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரையில் நீடிப்பார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் உயர் நிர்வாகக் குழு, தலைவர் மற்றும் மூன்று நிர்வாக இயக்குநர்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment