Tuesday 14 February 2017

15TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு :

ஹாக்கி வீரர் சந்தீப்புக்கு கெளரவ டாக்டர் பட்டம்
இந்திய ஹாக்கி வீரர் சந்தீப் சிங்குக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேஷ் பகத் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.


இதுகுறித்து, பட்டத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியின்போது சந்தீப் சிங் கூறுகையில், "இது எனக்கு மிகப்பெரிய கெளரவமாகும். ஒரு ஹாக்கி வீரராக எனது சிறப்பான பங்களிப்பிற்காக இத்தகைய பட்டம் வழங்கப்படுவது மிகப்பெரிய விஷயம். இது, எனது கடின உழைப்புக்கான அங்கீகாரம்' என்றார்.
இந்திய ஹாக்கி அணியின் சிறந்த டிராக் ஃப்ளிக்கராக இருந்த சந்தீப் சிங், கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக, இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படுவதும், பின்பு பறிக்கப்படுவதுமாக இருந்து வருகிறார். ஹாக்கி முன்னாள் கேப்டன் திலீப் திர்கிக்குப் பிறகு கெளரவ டாக்டர் பட்டம் பெறும் 2-ஆவது இந்திய ஹாக்கி வீரர் என்ற பெருமையை சந்தீப் பெற்றுள்ளார்.

ஐசிசி தரவரிசை: 2-ஆவது இடத்தில் மிதாலி ராஜ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தீப்தி சர்மா 17 இடங்கள் முன்னேறி 38-ஆவது இடத்துக்கும், திருஷ் காமினி 11 இடங்கள் முன்னேறி 41-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்த இடத்துக்கு முன்னேறியிருப்பது இது முதல் முறையாகும்.
வங்கதேச அணி கேப்டன் ருமானா அகமது 4 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்துக்கும், பாகிஸ்தானின் நைன் அபிதி 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 26-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா கேப்டன் வான் நீகெர்க் பேட்டிங் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 12-ஆவது இடத்துக்கும், பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் 2 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில், பாகிஸ்தானின் சனா மிர் இரு இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் எக்தா பிஷ்த் 3 இடங்கள் முன்னேறி 11-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
உலகம்:

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜிநாமா
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் தனது பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை இரவு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்நாட்டின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், முன்னாள் மூத்த ராணுவ அதிகாரியான மைக்கேல் ஃபிளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். புதிய அரசின் முதல் நியமனங்களில் ஒன்றாக அது அமைந்தது.
இந்த நிலையில், அவர் அந்தப் பதவியை ஏற்கும் முன்பே, அமெரிக்காவுக்கான ரஷிய தூதரை சந்தித்துப் பேசினார் என்ற செய்தி வெளியானது.
பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், தூதர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசினார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, அதிபர், துணை அதிபருடன் நடைபெற்ற நேர்காணலின்போது அவர்களிடம் அது குறித்து அவர் தெரிவித்தார். ஆயினும், ரஷிய தூதருடன் நடைபெற்ற உரையாடலைக் குறிப்பிடத் தவறிவிட்டார் என்று கூறப்பட்டது. இதனை சட்ட அமைச்சகம் சுட்டிக் காட்டியது. இந்த சம்பவம் காரணமாக, ஃபிளின்னை ரஷியா பிற்பாடு மிரட்டும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க சட்ட அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியா:

திரைப்படத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை
திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்களை திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திரையரங்குகளில் தேசிய கீதத்தை கண்டிப்பாக இசைக்க உத்தரவிடக் கோரி ஷியாம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்திருந்தது.
அப்போது தேசியக் கொடிக்கும், தேசிய கீதத்துக்கும் ஒருவர் செலுத்தும் மரியாதையானது நாட்டுக்குச் செலுத்தும் மரியாதையை பிரதிபலிப்பதாக அமையும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திரைப்படத்தின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மனுதாரர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழகம்:

சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை; 10 கோடி அபராதம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
அதிமுக பொதுச் செயலர் சசிகலா உட்பட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என்றும், அதன்படி, மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.
மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசியை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலாவை விடுவிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகம் :

"ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டம்: அடுத்த நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை
சிறு தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் "ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டத்தை அடுத்த நிதியாண்டில் அமல்படுத்துவதற்கு இதுவரை நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.
முன்னதாக கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டில் அத்தொகை ரூ.100 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கு தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை.
முன்னதாக, இந்தியாவில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தொழில் ஊக்க நிதித் திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்ஐசி) நிறுவனமும் முதலீடு செய்துள்ள இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ள விவரங்களில், ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் "ஸ்டார்ட் அப்' திட்டத்துக்கு ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை.

Click here to download 15th February Review in Tamil

No comments:

Post a Comment