Thursday 16 February 2017

17TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

வர்த்தகம் :

ஏர்-இந்தியா சேவையில் முதன் முதலாக "ஏ320 நியோ' விமானம்
ஏர்-இந்தியா விமான சேவையில் முதன்முதலாக "ஏர்பஸ் 320 நியோ' ரக விமானம் இணைந்துள்ளது.
இதுகுறித்து ஏர்-இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஷ்வனி லோஹனி தெரிவித்துள்ளதாவது:


ஏ320 நியோ ரக விமானம் முதன்முதலாக ஏர்-இந்தியாவின் விமான சேவையில் வியாழக்கிழமை இணைந்தது.
அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன ரக என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் 12 உயர்வு வகுப்பு இருக்கைகள் உள்ளிட்ட 162 இருக்கைகளைக் கொண்டது.
இந்த விமானத்தை சர்வதேச போக்குவரத்துக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த விமானம் குவைத் நாட்டின் அலஃப்கோ நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்குள் இதே வகையைச் சேர்ந்த மேலும் 13 விமானங்களை ஏர்-இந்தியா நிறுவன விமான சேவையில் இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். தற்போது ஏர்-இந்தியா குழுமத்தில் 138 விமானங்கள் உள்ளன என்றார் அவர்.
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கப்படி தண்ணீர் பீச்சியடித்து மரியாதை செய்யப்பட்டு ஏ320 நியோ விமானம் முதன்முதலாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இண்டிகோ மற்றும் கோ-ஏர் நிறுவனங்களை அடுத்து ஏ320 நியோ ரக விமானங்களை சேவையில் பயன்படுத்தும் மூன்றாவது நிறுவனம் ஏர்-இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்:

பாகிஸ்தான் விமானப் படையில் புதிய போர் விமானங்கள் சேர்ப்பு
சீனா - பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பில் உருவான 16 போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப் படையில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டன
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் முன்னிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம், காம்ரா விமானப் படை தளத்தில் சீன கூட்டுத் தயாரிப்பில் உருவான "ஜே.எப்.-17 தண்டர்' இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. உலக நாடுகளுடன், குறிப்பாக, அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழவே விரும்புகிறோம். ஆயினும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான பாதுகாப்புப் படைகளை உள்ள நாடாக நாம் திகழ வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
போர் சூழலில் மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் விமானப் படை பெரும் பங்காற்றி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான "ஜரப்-ஏ-அஸப்' நடவடிக்கையின்போது, நமது விமானப் படையின் பங்கு கணிசமானது. அந்த நடவடிக்கையையடுத்து, நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள். நமது பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
விண்வெளி ஆய்வில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது: அயல்நாட்டு ஊடகங்கள் கவனக்குவிப்பு
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் அனுப்பி வரலாற்று சாதனை படைத்ததையடுத்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய மிக முக்கியமான நாடாக உருவெடுத்துள்ளது என்று அயல்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரோ நேற்று பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டில் வானிலை கணிப்பு கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மற்றும் 103 நேனோ சாட்டிலைட்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது.
வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடும் போது, “இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு இன்னொரு வெற்றி. குறைந்த செலவில் தயாரிக்கப்படும் செயற்கைக் கோள்கள் மூலம் இந்தியா விண்வெளி சந்தையில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா ஏற்கெனவெ கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை அனுப்பியது” என்று கூறியது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, “104 செயற்கைக் கோள்களை சில நிமிடங்களில் விண்வெளியில் செலுத்தி, முந்தைய சாதனையைக் காட்டிலும் மும்மடங்கு சாதனையை நிகழ்த்தி, இந்தியா விண்வெளி கண்காணிப்பு மற்றும் தொடர்புபடுத்தல் புலத்தில் வளரும் வணிகச் சந்தையாக இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியா:

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைப் பணிகள்: புதிய விதிமுறை அமல்
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான பணிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்காக புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதனை ஊக்குவிக்கும் வகையில், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு பல்வேறு வரிச் சலுகைகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதற்கிடையே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன்பாகவே, கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது, அதனை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, இந்திய அரசின் வர்த்தக ஒதுக்கீட்டு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம்.
வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளராக பதவி வகித்துவந்த விகாஸ் ஸ்வரூப், கனடாவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1985-ஆம் ஆண்டு பிரிவு வெளியுறவு அயல் பணி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டவர் விகாஸ் ஸ்வரூப். வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளராக பதவி வகித்துவந்த இவர், தற்போது கனடாவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் முறைப்படி பதவியேற்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கனடாவுக்கான இந்தியத் தூதராக அருண் குமார் சாஹு பதவி வகித்துவந்தார். தற்போது, அவருக்கு பதிலாக புதிய தூதராக விகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளராக பதவி வகித்துவந்த ஸ்வரூப், அதற்கு முன்பு அந்தத் துறையின் ஐ.நா. பிரிவு கூடுதல் செயலராகவும் பதவி வகித்திருக்கிறார். துருக்கி, அமெரிக்கா, எத்தியோப்பியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் தூதரகப் பதவிகளை விகாஸ் ஸ்வரூப் வகித்திருக்கிறார்.
உலக சாதனை படைத்தது இஸ்ரோ: 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஒரே ராக்கெட்டில் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை புதன்கிழமை விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தி புதிய உலகச் சாதனை படைத்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.28 மணிக்கு 104 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-37 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 28 நிமிடம் 42 விநாடிகளில் சுமந்துச் சென்ற செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது.
இதில், முக்கியமாக இந்தியாவின் கார்ட்டோசாட்-2 செயற்கைகோள் 714 கிலோ எடை கொண்டதாகும். இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.

விளையாட்டு :

கத்தார் ஓபன் கெர்பர் அதிர்ச்சித் தோல்வி
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
இந்தப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் "பை' பெற்றிருந்த கெர்பர் தனது 2-ஆவது சுற்றில் 4-6, 6-0, 4-6 என்ற செட் கணக்கில் ரஷியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனையான டேரியா காஸட்கினாவிடம் தோல்வி கண்டார்.
இந்த ஆண்டில் 2-ஆவது முறையாக காஸட்கினாவிடம் தோல்வி கண்டுள்ளார் கெர்பர். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிட்னி சர்வதேசப் போட்டியில் தோல்வி கண்டிருந்தார்.
தோல்விக்குப் பிறகு பேசிய கெர்பர், "நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் விளையாடியது மிகக் கடினமாக இருந்தது. நான் இன்று (பிப்.16) சிறப்பாக விளையாடவில்லை. ஃபார்முக்கு வருவதற்காக போராடினேன். அதேநேரத்தில் காஸட்கினா சிறப்பாக ஆடினார். இந்த நாள் என்னுடைய நாளாக இருக்கவில்லை' என்றார்.
காஸட்கினா தனது காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான பியூர்ட்டோ ரிகோவின் மோனிகா பெக்கை சந்திக்கவுள்ளார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை தோற்கடித்தார்.
'சிறந்த விளையாட்டு வீரர்' விருது வென்றார் உசேன் போல்ட்: வீராங்கனை பிரிவில் சைமன் பில்ஸ் தேர்வு
உலகின் மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், 2017-ஆம் ஆண்டுக்கான "சிறந்த விளையாட்டு வீரர்' விருதும், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன் பில்ஸ் "சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதும் வென்றுள்ளனர்.
இதில் உசேன் போல்ட், 4-ஆவது முறையாக இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த விருதை 4 முறை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அலைச் சருக்கு (சர்ஃப்) வீரர் கெல்லி ஸ்லேட்டர் ஆகியோரின் வரிசையில் உசேன் போல்ட் இணைந்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு "லாரஸ்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. விளையாட்டு உலகின் "ஆஸ்கார்' விருதாக மதிக்கப்படும் இந்த விருது, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

Click here to download 17th February Review in Tamil

No comments:

Post a Comment