Monday 13 February 2017

14TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

நாளை ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்: 28 நிமிடங்களில் 104 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தத் திட்டம்
பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இதில், 104 செயற்கைக்கோள்களை 28 நிமிடங்களில் விண்வெளியில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் பிஎஸ்எல்வி சி-37 செலுத்தப்படுகிறது. 28 நிமிடங்கள் 42.80 விநாடியில் விண்வெளிப் பாதையில், 104 செயற்கைக்கோள்களும் 505 கி.மீ. தூரத்துக்குள்ளாக விண்வெளிப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
இந்திய வம்சாவளி நடிகர் தேவ் படேலுக்கு பாஃப்டா விருது
இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் தேவ் படேலுக்கு பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
"லயன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருது தேவ் படேலுக்கு வழங்கப்பட்டது.
பிரிட்டன் மற்றும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு பாஃப்டா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2016-ஆம் ஆண்டுக்கான பாஃப்டா விருது வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விருதுக்கு பல்வேறு திரைப்படங்கள் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தன. "லா லா லேண்ட்', "லயன்', "மான்செஸ்டர் பை தி ஸீ', ஃபென்ஸஸ்' உள்ளிட்ட திரைப்படங்கள் அவற்றில் அடங்கும். இதில் "லா லா லேண்ட்' என்ற திரைப்படம் மட்டும் அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகைக்கான விருது இத்திரைப்படத்தின் கதாநாயகியான எம்மா ஸ்டோனுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது டாமியன் சாúஸலுக்கும் வழங்கப்பட்டன.
இந்தத் திரைப்படமானது ஆஸ்கர் விருதுக்காக 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

உலக வானொலி தினம்: மோடி வாழ்த்து
உலக வானொலி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டர் வலைதளத்தில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வானொலி ரசிகர்களுக்கும், வானொலி துறையில் பணியாற்றுபவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துறையை செயல்பாடு நிறைந்ததாகவும், துடிப்பானதாகவும் நிலைநிறுத்த வேண்டும்.
வானொலி என்பது பிறருடன் தொடர்பு கொள்வதற்கும், கலந்துரையாடுவதற்கும், கற்றுக் கொள்வதற்கும் ஏற்ற சிறந்த சாதனமாகும்.
வானொலியில் ஒலிபரப்பாகும் எனது "மனதின் குரல்' நிகழ்ச்சி இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களுடனும் நான் தொடர்பு கொள்ள உதவுகிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகம்:
உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
தமிழக அரசின் உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''விடுப்பில் சென்றுள்ள தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார். உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு, வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டு இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டு :

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் நியமனம்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் கேப்டனாக இருந்த அலாஸ்டர் குக், தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து துணை கேப்டனான ஜோ ரூட் இப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குக் கேப்டன்ஷிப்பின் கீழ் அறிமுக வீரராக களம் கண்ட ஜோ ரூட், இப்போது இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இது தொடர்பாக ஜோ ரூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி எனக்கு வழங்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும்.
எங்கள் அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களை வழிநடத்திச் செல்வதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் கூறுகையில், "எங்கள் அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு ஜோ ரூட் சரியான நபர். அவர், கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டது எனக்கு த்ரில்லாக இருக்கிறது' என்றார்.
இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 11 சதம், 27 அரை சதங்களுடன் 4,594 ரன்கள் குவித்துள்ளார்.

வர்த்தகம் :

ஏவுகணை தொழில்நுட்ப மேம்பாடு: எல் & டி - ஐரோப்பிய நிறுவனம் ஒப்பந்தம்
இந்தியாவில் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் எல் & டி நிறுவனம், ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிறுவனமான எம்.பி.டி.ஏ. வுடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதுகுறித்து எல் & டி குழுமத்தின் செயல் தலைவர் ஏ.எம். நாயக் தெரிவித்ததாவது:
உள்நாட்டில் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பல்வேறு வகையான ஏவுகணைகளை வடிவமைத்து இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் இந்தக் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக எம்பிடிஏ நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களது உறவு மேலும் வலுப்படும். எல் & டி-யின் பாதுகாப்பு பிரிவிலான ஆண்டு விற்றுமுதலை வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் ரூ.10,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.

Click here to download 14th Febuary Review in Tamil

No comments:

Post a Comment