விளையாட்டு:
பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இறகுப் பந்தாட்ட வீராங்கனையான பி.வி.சிந்து சர்வதேச பட்டியலில் மூன்றாவது இடத்தில் நிற்பவர். ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்காக முதல் வெள்ளிப் பதக்கம் பெற்று வந்தவர். இதுவரை சுமார் இருநூறு வெற்றிகளை குவித்திருப்பவர்.
இந்நிலையில், சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகையும், அமராவதியல் 1000 சதுர அடி வீடும் வழங்கி இருந்தது. இதற்கிடையே பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா ஜி.எஸ்.டி.க்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்த பிறகு பி.வி.சிந்து துணை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு மறுப்பு
ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர்.
பிரெஞ்சு ஓபனில் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஷரபோவா, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அவர், தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த மாதம் சர்வதேச டென்னிஸுக்கு திரும்பினார்.
எனினும் நீண்ட நாள்கள் விளையாடாததன் காரணமாக அவர் தரவரிசையில் பின்னடைவை சந்தித்தார். தற்போது 211-ஆவது இடத்தில் இருக்கும் ஷரபோவா, தரவரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெற முடியாது. அதனால் தனக்கு வைல்ட்கார்டு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டி ஏற்பாட்டாளர்கள் வைல்ட்கார்டு வழங்க மறுத்துவிட்டதால், தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் ஷரபோவா.
உலகம் :
மாற்றத்தை உருவாக்கிய தொழிலதிபர்கள்: முகேஷ் அம்பானி முதலிடம்
சர்வதேச அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய 25 தொழிலதிபர்கள் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி (60) முதலிடம் பிடித்துள்ளார்.
தங்களது தொழில் செயல்பாடுகள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழிலதிபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை இரண்டாவது ஆண்டாக தற்போது வெளியிட்டுள்ளது
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் முகேஷ் அம்பானி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு குறைந்த செலவில் இணையத்தை பயன்படுத்த வாய்ப்பையும் அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன் மூலம் மாற்றத்தை உருவாக்கிய தொழிலதிபர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் பிரதமராக எட்வர்ட் பிலிப் அறிவிப்பு
எட்வர்ட் பிலிப்புடன் (இடது) அதிபர் இமானுவல் மேக்ரான்.
பிரான்ஸின் புதிய பிரதமராக எட்வர்ட் பிலிப் அறிவிக்கப்பட்டார்.
அதிபர் இமானுவல் மேக்ரான் திங்கள்கிழமை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எட்வர்ட் பிலிப் (46) தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், லெஹாவர் நகர மேயராகவும் உள்ளார். தேசிய அளவில் இதுவரை எந்தப் பொறுப்பையும் அவர் வகித்ததில்லை.
அதிபர் இமானுவல் மேக்ரான் கடந்த ஆண்டு ரிபப்ளிக் ஆன் மார்ச் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். அதில் போதிய அளவில் மூத்த தலைவர்கள் இல்லை. இந்நிலையில் அந்நாட்டின் அதிகாரம் மிக்க அதிபருக்கான நேரடித் தேர்தலில் மேக்ரான் அமோக வெற்றி பெற்றார்.
ஜெர்மனி உள்பட 3 நாடுகளுக்கு 29-இல் மோடி பயணம்
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் 29-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரஷியா செல்லவுள்ள மோடி, இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாடுகளில் அவர் மொத்தம் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியா:
தில்லி ஐஐஐடி-யில் இளநிலை உதவியாளர் வேலை
ஐஐஐடி என அழைக்கப்படும் இந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி டெல்லியில் காலியாக உள்ள 10 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினி குறித்த தகவலுடன் எம்எஸ் ஆபிஸ் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2017
பணி: Jr.Assistant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.25,495
தகுதி: பட்டம் மற்றும் கணினி குறித்த தகவலுடன் எம்எஸ் ஆபிஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2017
ஆன்லைன் விண்ணப்பிக்க https://iiitd.ac.in/onlinejobapplications/ என்ற லிங்கை கிளிக் செய்க.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iiitd.ac.in/sites/default/files/docs/positions/Jobs-Advts-2017-Misc-032017.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தமிழகம்:
ஆஸ்திரேலியா 'ஓசன் சீல்டு' கப்பல் நாளை சென்னை வருகிறது
சென்னைக்கு வரும் ஆஸ்திரேலிய நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஓசன் சீல்டு கப்பல்.
ஆஸ்திரேலிய நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 'ஓசன் சீல்டு' என்ற கப்பல், வியாழக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கடலோரக் காவல் படையினரும் வெளிநாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினரும் நல்லெண்ணம் அடிப்படையில் கலந்துரையாடல், தகவல்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம், சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த அடிப்படையில், ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் 'ஓசன் சீல்டு' வியாழக்கிழமை சென்னை வருகிறது.
நடு கடலில் பல்வேறு வகையில் உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கப்பல், 110 மீட்டர் நீளமும், 22 மீட்டர் அகலமும் கொண்டதாகும். மணிக்கு 16 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பல், சுமார் 8,500 டன் எடை கொண்டாகும். மேலும், பொருள்களை எடுத்துச் செல்ல சுமார் 1000 மீட்டர் பரப்பளவிலான இடம் உள்ளது.
இக்கப்பலின் மேல் பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கும் தளம் உள்ளது. காணாமல் போன மலேசியா விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்களில் 'ஓசன் சீல்டு'ம் ஒன்று. இக்கப்பல் சனிக்கிழமை வரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
வர்த்தகம் :
உலக தொலைத்தொடர்பு தினம்: 'எஸ்டிவி 333' திட்டத்துக்கு சிறப்புச் சலுகை
உலக தொலைத்தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்டிவி 333 திட்டத்துக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்த விவரம்: பிஎஸ்என்எல் நிறுவனம் 'இதவிட ஒசந்தது எதுவுமில்ல' எனும் பெயரில் எஸ்டிவி 333, 349, 395, 339 ஆகிய 4 டேட்டா ரீ சார்ஜ் திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இவற்றில், எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தினமும் 3 ஜிபி அளவுக்கு தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்வதோடு, 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல், இதர திட்டங்களுக்கும் அதிகளவு டேட்டா, அளவிலா உள்ளூர் வெளியூர் அழைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. நாள்தோறும் 12-15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்து வருகின்றனர்.
உலக தொலைத்தொடர்பு தினத்துக்காக..: 'எஸ்டிவி 333' ரீசார்ஜ் திட்டத்தை அதிக வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மே 17-ஆம் தேதி உலக தொலைத்தொடர்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பிஎஸ்என்எல் நிறுவனம் மே 17, 18, 19 ஆகிய 3 நாள்களுக்கும் எஸ்டிவி 333 ரீசார்ஜ் திட்டத்தில் அளவிலா தகவல்களை பதிவிறக்கம் (unlimited data offer) செய்து கொள்ளும் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment